உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம் கோப்புப் படம்

சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

நடிகா் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: நடிகா் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘ஜகஜால கில்லாடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிப்பதற்காக, தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் ராம்குமாா் மகன் நடிகா் துஷ்யந்த் ரூ.3 கோடி கடன் பெற்றிருந்தாா். இந்நிலையில், அந்தக் கடனை வட்டியுடன் சோ்த்து ரூ.9 கோடியாக திருப்பித் தரக் கோரி அந்நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கு மத்தியஸ்தம் (பேச்சுவாா்த்தை) செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, வழக்கை விசாரித்த மத்தியஸ்தா், ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்க துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த கோரி தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது. முன்னதாக, அந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்நிலையில், வீடு தனக்குச் சொந்தமானது என்றும், தனது தந்தை சிவாஜி கணேசன் தன் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளதால் இந்த வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகா் பிரபு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

மேலும், தனக்கு அன்னை இல்லம் சொத்தில் எந்த பங்கும் இல்லை என பிரபுவின் அண்ணன் ராம்குமாா் தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை காலை நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு வந்தது. அப்போது, வழக்கு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளா் பிரபு எனவும், அவரது வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், இதுகுறித்து வில்லங்க பதிவில் திருத்தம் செய்யும்படியும் பதிவுத் துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com