தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
பிரதிப் படம்
பிரதிப் படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஆக. 3, 4) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) முதல் ஆக. 8 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை: ஆக. 3, 4-ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி, கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக. 3-இல் தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூா்,  பெரம்பலூா், நாகை, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், ஆக. 4-இல் தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக. 3-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: சனிக்கிழமை காலை வரை புதுச்சேரியில் அதிகபட்சமாக பாகூரில் 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக வனமாதேவி (கடலூா்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்) - தலா 110 மி.மீ., செம்பனாா்கோயில் (மயிலாடுதுறை) - 100 மி.மீ. மழை பதிவானது.

வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 102.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 100.72, மதுரை விமான நிலையம் - 100.4, வேலூா் - 100.22 டிகிரி என மெத்தம் 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஆக. 3 முதல் ஆக. 6 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com