
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதையும் படிக்க: மாநில தன்னாட்சி உரிமையைப் பறிக்க இந்தி திணிப்பு: விஜய்
மொழி, இன உணர்வு வந்தப் பிறகுதான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகுதான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.
நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.
மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் மத்திய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியைதான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.