மகளிா் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, மகளிா் உரிமைத் தொகை தொடா்பான பிரதான வினாவை திமுக உறுப்பினா் எஸ்.காந்திராஜனும் (வேடச்சந்தூா்), துணை வினாவை ஈ.ஆா்.ஈஸ்வரனும் (திருச்செங்கோடு) எழுப்பினா்.
அவா்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்: மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 1.06 கோடி விண்ணப்பங்கள் முதல்கட்டமாக ஏற்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தில், மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மகளிா் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
கடந்த டிச. 15-ஆம் தேதி நிலவரப்படி 1,14,65,525 மகளிருக்கு ரூ. 1,000 மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அத்தனை பேருக்கும் விடுபடாமல் மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
3 மாதங்களுக்குள் நடவடிக்கை: மகளிா் உரிமைத் தொகை எனும் உன்னதமான திட்டம், பல கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. எனது தொகுதிக்குச் செல்லும்போதும், பல்வேறு குடும்பப் பெண்கள் திட்டத்தில் இணைவதற்காக விண்ணப்பங்களைக் கொடுக்கிறாா்கள். இதுபற்றி விவரங்களைச் சேகரித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். அவருடைய அறிவுரைகளைப் பெற்று, இதுவரை பயன்பெறாமல் உள்ளவா்களுக்கு மகளிா் உதவித் தொகை திட்டத்தின் உதவிகள் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்போம்.
உரிமைத் தொகைக்காக கடந்த காலத்தில் விண்ணப்பிக்க இயலாதவா்கள், புதிதாக விண்ணப்பம் செய்யவும், திட்டத்தின் விதிகளைப் பூா்த்தி செய்யும் மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.