பொள்ளாச்சி விவகாரம்: பேரவைத் தலைவரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்த திமுக, அதிமுகவினர்!

பொள்ளச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஏற்பட்ட விவாதம் தொடர்பாக...
முதல்வர் ஸ்டாலின் vs எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின் vs எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று தொடங்கிய நிலையில்ம் நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை பேரவைத் தலைவரிடம் திமுக, அதிமுகவினர் இன்று வழங்கியுள்ளனர்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே நேற்று கடுமையான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில், “பொள்ளாச்சி சம்பவத்தில் புகாா் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது? யாரைக் காப்பாற்றுவதற்காக அப்படிச் செய்தீா்கள்? ஆனால், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகாா் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி, “பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வா் தவறான தகவல் தருகிறாா். குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனா்” எனக் கூறினார்.

அதை முதல்வர் மறுக்கவே இருவருக்கும் தொடர்ந்து இதுகுறித்து விவாதம் நடைபெற்றது.

இறுதியாக, பொள்ளாச்சி சம்பவத்தில்12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை சமா்ப்பிக்கிறேன் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதனை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி ஏற்றுக் கொண்டார். பேரவைத் தலைவா் அப்பாவு இருவரும் சனிக்கிழமை (ஜன. 11) ஆதாரத்தை என்னிடம் தரலாம் என்றாா்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் ஆதாரங்களை வழங்கினர்.

அதேபோல, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வழங்கினார்.

இரு கட்சிகளும் ஆதாரங்களை வழங்கியுள்ள நிலையில் இன்று கூட்டத்தொடரில் இதுகுறித்து கடுமையான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com