/

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு...

News image
Updated On :8 ஜனவரி 2025, 6:56 am

DIN

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றம் ஒரு பெண் மட்டும் பாதிக்கப்படவில்லை, பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, வழக்கு சிபிஐ-யிடம் சென்ற பிறகுதான் உண்மை வெளியே வந்தது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதியப்படவில்லை.

பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டது என்று சிபிஐ தெளிவாக தெரிவித்தது.

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜியும் சிறப்பு புலனாய்வுக் குழு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். சென்னை மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை, திமுகவின் ஆதரவாளர்.” என்று பேசினார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.