மதுரை, திருச்சியில் அமையும் டைடல் பூங்கா பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மதுரை மற்றும் திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையின் போது, திருச்சி மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்சியில், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவானது, 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் தரைத் தளம் மற்றும் 6 தளங்களுடன் அமையவுள்ளது.

மேலும் 18 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 5000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.289 கோடியில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், மதுரை மற்றும் திருச்சியில் அமையும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் அமைய உள்ள டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.