
கோவை : ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகி வருவதாகவும், எனவே, விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஐஜி அலுவலகத்தில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை நேரில் மனு கொடுத்துள்ளார்.
பின்னர் பேசிய அண்ணாதுரை, எனக்கு சரியான செக்சன் போட்டு வழக்கு தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன்.
எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ செய்கிறேன் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். உடல் கூராய்வு முடீவுகள், ஆய்வுக்கூட அறிக்கை, ஆடியோ ரிப்போர்ட் வரவில்லை. இதனால் காலதாமதம் ஆகும். அறிக்கைகள் வந்தவுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கு தொய்வாக போகிறது. விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது. தனி விசாரணை அதிகாரி வேண்டும். சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோளும் வைத்துள்ளோம்.
உடல் கூறாய்வு அறிக்கை கொடுக்கும் பொழுது எங்களுக்கு வாக்குறுதி கொடுத்த பின்புதான் உடலை அடக்கம் செய்தோம். மூன்று பேரை கைது செய்வோம் என தெரிவித்தனர். அடுத்த நாள் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜாமினில் வந்துள்ளார். 29ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஆடியோ வெளியானது.
பைண்டிங் ஆர்டர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜாமினில் விடவேண்டிய அவசியம் என்ன? லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கூடுதல் ஆவணங்கள் அவர்களே திரட்டி உள்ளனர். நகைகளை இன்னும் எங்களுக்குத் தரவில்லை. ஆதாரங்களை திரட்டி விட்டு நீதிமன்றம் மூலமாக எங்களுக்கு தருவார்கள் என்கிறார்கள். ரிதன்யா தற்கொலை வழக்கில் இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது. இது தொடர்பாக பொதுமக்களுக்கும் போய் சேர்ந்ததற்கு, தைரியத்தை கொடுத்ததற்கு ஊடகத்திற்கு நன்றி.
அதேபோல பெண்ணை இழந்து விட்டு வருத்தத்தில் உள்ளேன். நான் பேச்சாளர் இல்லை. என்னுடைய உணர்வுகளை பிரதிபலித்தேன். 27 வருடம் காப்பாற்றின பெண்ணை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பது, இழந்ததை விட மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் தங்கச்சியாக இருந்தால் இப்படி சமூக வலைதளங்களில் போடுவீர்களா? சரியான தகவலை போடுங்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிக்க.. ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.