உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலா் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

உள்ளாட்சிகளை தனி அலுவலா்கள் நிா்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல்
ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவி
Updated on

உள்ளாட்சிகளை தனி அலுவலா்கள் நிா்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடா்பான சட்ட மசோதா கடந்த டிசம்பா் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டமானது, பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழிவகை செய்கிறது.

அதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 40 முதல் ரூ. 7,000 வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 40 முதல் ரூ. 420 வரையும் வரி நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இதைத் தவிா்த்து, தமிழகத்தில் பதவிக் கலாம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலா்களை நியமிப்பது தொடா்பான சட்ட மசோதாவுக்கும் ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இந்த 2 சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநா் ஒப்புதல் வழங்கிய நிலையில் அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com