/

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் விளக்கம்!

பட்ஜெட் திட்டங்களை உடனடியாக செய்து முடிப்பதே அடுத்த இலக்கு என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- படம் | எக்ஸ்
Updated On :16 மார்ச் 2025, 1:32 pm

DIN

மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்ட பட்ஜெட்டில் 'ரூ' என மாற்றியிருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ வெளியிட்டு மு.க. ஸ்டாலின் பேசியுள்ளதாவது,

தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்!

''மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்ட ’ரூ’ என மாற்றியிருந்தோம். அதனை மத்திய அரசு பெரிதாக்கிவிட்டது. தமிழைப் பிடிக்காதவர்கள் இதனைப் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.

100 நாள் வேலைத் திட்ட ஊதியம், பேரிடர் நிதி, பள்ளிக் கல்வி நிதியை விடுக்க வேண்டும் என 100 கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தேன். அது குறித்து பேசாத மத்திய நிதி அமைச்சர் ரூ-க்கு பதில் அளித்துள்ளார். அவர்களே பல பதிவுகளில் 'ரூ' என்றே குறிப்பிட்டுள்ளார்.

அதற்கெல்லாம் பதில் அளிக்காதவர்கள் 'ரூ'-க்கு பதில் அளித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்திய அளவில் நம் தமிழும் ஹிட்; பட்ஜெட்டும் ஹிட்;

பட்ஜெட் குழுவில் பொருளாதார நிபுணர்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். மறுபுறம் அடித்தட்டு மக்களின் தேவைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டோம். அதோடு மற்ற நாடுகளில் மக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டக்கள் என்னென்ன என்பதையும் ஆலோசித்துதான் இந்த பட்ஜெட்டை தயாரித்தோம்.

மக்கள் நலத் திட்டங்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பட்ஜெட்டை தினமணி உள்பட பல நாளிதழ்கள் பாராட்டியுள்ளன.

தமிழக பட்ஜெட் குறித்து சமுக வலைதளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர்.

ஊர்க்காவல் படையில் திருநர் மக்களை ஈடுபடுத்தும் தமிழக அரசின் திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்களும் தமிழக பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டின் கடன் குறைவு

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் அதனை பரிசீலிப்போம். எதையாவது சொல்ல வேண்டும் என்றே சொல்வது அரசின் மீதுள்ள வன்மத்தை மட்டுமே காட்டுகிறது.

2011 - 2016 வரை கடன் வளர்ச்சி என்பது 108 விழுக்காடு.

2016 - 2021-ல் கடன் வளர்ச்சி 128 விழுக்காடாக அதிகரித்தது.

ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இப்போது வரை 93 விழுக்காடாக கடன் வளர்ச்சி குறைந்துள்ளது.

மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது.

தமிழகத்தின் கடன் கட்டுக்குள் உள்ளதாக அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. கடன் வாங்காத அரசே இல்லை. அந்தவகையில் எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காகவே கடன் தொகையை செலவிடுகிறது தமிழ்நாடு அரசு.

அடுத்த இலக்கு என்ன?

பட்ஜெட் திட்டங்களை உரிய முறையில் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதனை அமல்படுத்துவதே அடுத்தக்கட்ட பணி.

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வர வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். இதனால் ஓய்வே இன்றி உழைக்க வேண்டும். இதுவே என் அடுத்தகட்ட பணி. நன்றி'' என முதல்வர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.