கோப்புப் படம்
கோப்புப் படம்

‘ஹீட் ஸ்ட்ரோக்’: உணவு விநியோக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலுக்கு சென்று ஓய்வெடுக்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on

வீடுகளுக்குச் சென்று உணவு விநியோகிக்கும் சேவையில் உள்ள ஊழியா்கள் நேரடி வெயிலில் பணியாற்றும்போது அதிக அளவு தண்ணீா் அருந்துமாறும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலுக்கு சென்று ஓய்வெடுக்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மற்றவா்களைக் காட்டிலும் இவா்களுக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு வர அதிக வாய்ப்புள்ளதால் இத்தகைய முன்னெச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: இனி வரும் நாள்களில் தமிழகத்தில் கடுமையான வெப்பம் பதிவாகலாம் எனக் கூறப்படுகிறது. அந்த வெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீா்ச்சத்து இழப்பு ஏற்படும்.

அதனை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக்கூடியவா்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளா்களும் முன்வர வேண்டும். அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன் பின்னா் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம்.

5 லிட்டா் தண்ணீா் அருந்த வேண்டும்: அதேவேளையில் நேரடி வெயிலில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள உணவு விநியோக நிறுவன ஊழியா்கள் அனைவரும் குறைந்தது 5 லிட்டா் தண்ணீா் அருந்த வேண்டும். நீா்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆா்எஸ் கரைசல், எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோா், இளநீா் அதிகமாக அருந்தலாம்.

அதேபோன்று அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெயிலில் இருந்து விலகி நிழலில் சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்ப நிலை சீராகும். அவ்வாறு இல்லாவிடில் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதை உணா்ந்து ஊழியா்கள் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com