பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

நாட்டில் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டது பற்றி...
ரயில் நிலையங்களை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி.
ரயில் நிலையங்களை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி.PTI
Published on
Updated on
1 min read

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை திறந்துவைத்தார்.

இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 13 ரயில் நிலையங்கள் அடங்கும்.

‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள 90 ரயில் நிலையங்களும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-இல் தொடங்கியது.

இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் ரூ. 11.5 கோடி மதிப்பிலும், சூலூா்பேட்டை ரயில் நிலையம் ரூ. 14.50 கோடி மதிப்பிலும், சாமல்பட்டி ரயில் நிலையம் ரூ. 8 கோடியிலும், மாஹி ரயில் நிலையம் ரூ. 18.5 கோடியிலும், வடகரா ரயில் நிலையம் ரூ. 24.25 கோடியிலும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ரூ. 6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ. 8.27 கோடியிலும், போளூா் ரயில் நிலையம் ரூ. 6.15 கோடியிலும், சிதம்பரம் ரயில் நிலையம் ரூ. 5.96 கோடியிலும், விருதாசலம் ரயில் நிலையம் ரூ. 9.17 கோடியிலும், மன்னாா்குடி ரயில் நிலையம் ரூ. 4.69 கோடியிலும், சிறயின்கீழு ரயில் நிலையம் ரூ. 7 கோடியிலும், குழித்துறை ரயில் நிலையம் ரூ. 5.35 கோடி மதிப்பில் என மொத்தம் 13 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், முதல்கட்டமாக நாடு முழுவதும் ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

ராஜஸ்தான் மாநிலம், தேஷ்நோக் ரயில் நிலையத்தில் நேரடியாக கலந்துகொண்ட பிரதமர் மோடி காணொலி வாயிலாக அனைத்து ரயில் நிலையங்களையும் திறந்துவைத்தார்.

மேலும், பிகானீர் - மும்பை இடையே புதிய ரயில் சேவையையும் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேரடியாக கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com