/

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரங்களுக்கு திமுக அரசு தொடர்ந்து நெருக்கடி தருவதாக விஜய் குற்றச்சாட்டு

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:39 am

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரங்களுக்கு திமுக அரசு நெருக்கடி தருவதாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரங்களின் மீது நெருக்கடி தருவதாகக் குற்றஞ்சாட்டிய விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.

தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் திமுகவுக்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.

தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் திமுக அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.

கடைசி நேரம்வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து,  நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் தவெகவின் பிரசாரத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று திமுகவின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.  

பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் தவெக ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. தவெகவுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன்சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது. தவெகவின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான்.  ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன்  ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.

எல்லையின்றி அராஜகத்தையும் ஊழலையும் செய்து, எல்லையின்றி பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. மக்களே… இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

TVK Vijay alleges that the DMK government is continuously creating hurdles for the election campaigns of the Tamilaga Vettri Kazhagam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.