

சென்னை புறநகர் ரயில் சேவைகள் பாதிப்புக்கு வருகிற திங்கள்கிழமைக்குள்(மார்ச் 2) தீர்வு காணப்படும் என தெற்கு ரயில்வே கூறியதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான சென்னை புறநகர் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முதலில் 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று(பிப். 24) மேலும் 49 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மேலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் இதுகுறித்து ரயில்வே-க்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக தென்னக ரயில்வே பொது மேலாளரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் திமுக எம்.பி. தயாநிதி மாறன்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் கூடுதலாக ரயில்களை இயக்கி இந்த பிரச்னையை சரி செய்கிறோம் என்றும் வருகிற திங்கள்கிழமைக்குள்(மார்ச் 2) மக்களுக்கு அவதியின்றி சுமூகமான நிலையைக் கொண்டுவருவோம் என்றும் ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
புறநகர் ரயில்களில் ஏற்கெனவே இருக்கும் பெட்டிகளுடன் கூடுதலாக 5 பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் மறுசீரமைப்புப் பணிகளை மார்ச் 30 ஆம் தேதிக்குள் முடிக்க முயற்சி செய்கிறோம் என்றும் தென்னக ரயில்வே கூறியுள்ளது.
மோசமான நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் இருப்பதால் வேறு வழியின்றி சீரமைப்புப் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்"என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.