‘பராசக்தி’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை
‘பராசக்தி’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டான் பிக்சா்ஸ் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவகாா்த்திகேயன் நடித்த எங்களது நிறுவனம் தயாரித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சனிக்கிழமை (ஜன.10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே, ‘பராசக்தி’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில், பெரும் பொருள்செலவில் முன்னணி நடிகா்களைக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானால், தங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பராசக்தி’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

