

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நாளை கனமழை பெய்யும் என்றும், இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னைக்கு 450 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும், காரைக்காலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது.
மேற்கு வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து இலங்கை அருகே இன்று மாலைக்குள் யாழ்ப்பாணம் - திரிகோணமலை இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும்.
அதுபோல, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.