

எண்ணூரில் உள்ள கோரமண்டல் அமோனியா உர நிறுவனத்துக்கு சீல் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவொற்றியூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023 டிச.26-ஆம் தேதி எண்ணூரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்துக்கு துறைமுகத்தில் இருந்து திரவ அமோனியாவை கொண்டுச் செல்ல கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் சேதமடைந்தது. அப்போது, ஏற்பட்ட அமோனியா கசிவால் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பாதிப்புக்கு ரூ.5.92 கோடி இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டது.
போபால் விஷவாயு துயரச் சம்பவத்துக்கு இணையான விஷவாயு கசிவு ஏற்படுத்திய அமோனியா உர நிறுவனத்துக்கு சீல் வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் அந்த நிறுவனத்தில் அமோனியா பரிமாற்றம், சேமிப்பு உள்ளிட்ட அபாயகரமான செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் 2023-ஆம் ஆண்டு அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.