சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும் 'அசுரன்' திரைப்பட கதாசிரியருமான மூத்த எழுத்தாளர் பூமணி காலமானார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் அவர் காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து பூமணியின் இறுதிச்சடங்குகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று உறவினர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமணி.
1947-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துரை, தேனம்மாள். இளையரசனேந்தலில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பயின்றார். கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
1966-ஆம் ஆண்டுமுதல் கவிதை, சிறுகதைகள் எழுதி வந்த இவர், 1979-முதல் நாவல் எழுதத் தொடங்கினார். இவரது முதல் நாவல் "பிறகு' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களை எழுதினார். 6-ஆவது நாவலாக அஞ்ஞாடி நாவலை 2005-இல் எழுதத் தொடங்கி, 2011-இல் நிறைவு செய்தார். 1,100 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் 2012 ஜனவரியில் வெளியிடப்பட்டது.
இந்த நாவலுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. 2014-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதும் வழங்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் பின்னணியில், சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற மோதல், சிவகாசி பகுதியில் நிகழ்ந்த சாதிக் கலவரம் எனப் பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது அஞ்ஞாடி. எழுத்தாளர் பூமணி "கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019இல் வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் கதாசிரியராகவும் பங்காற்றியுள்ளார். அவரது வெக்கை நாவலை தழுவியே அசுரன் திரைப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
enior writer Poomani, a Sahitya Akademi awardee, passed away.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











