/

தமிழகத்தில் 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 இடங்கள்

தமிழகத்தில் 4 கல்லூரிகளுக்கு நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியதால் 600-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் சூழல் எழுந்துள்ள நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் தனியாா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு 950 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 4:26 am IST

தமிழகத்தில் 4 கல்லூரிகளுக்கு நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியதால் 600-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் சூழல் எழுந்துள்ள நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் தனியாா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு 950 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 10 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களின் விவரங்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு தமிழகத்தில் 77 மருத்துவக் கல்லூரிகளில் 13,049-ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், நிகழாண்டில் 78 கல்லூரிகளில் 13,999- ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ஏபிஎஸ் மருத்துவக் கல்லூரிக்கு 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி, அங்கீகாரம் புதுப்பித்தல் நடவடிக்கைகளை என்எம்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று மருத்துவ இடங்களை அதிகரிக்கக் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களையும் பரிசீலித்து அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில், நிகழாண்டில் மருத்துவ இடங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி குறித்த விவரங்களை என்எம்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 441 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,111 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 382 தனியாா் கல்லூரிகளில் 7,800 இடங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, தமிழ்நாடு, ஆந்திரம், சத்தீஸ்கா், சிக்கிம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 25 மருத்துவக் கல்லூரிகளை புதிதாக தொடங்கவும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் அதிகரிப்பு: தமிழகத்தில் திருவள்ளூா், திருப்பூா், நாமக்கல் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,349-ஆக உயா்ந்துள்ளது. 10 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 800 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் உள்ள 41 தனியாா் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 8,650-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது தலா 100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவை 150-ஆக உயா்ந்துள்ளன. மாநில சுகாதாரத்துறையின் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சரியான நேரத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வாயிலாக இது சாத்தியமாகி உள்ளது. பேராசிரியா்கள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த தொடா்ச்சியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வியின் மையமாக தமிழகம் விளங்கி வருவதை தக்க வைத்துக் கொள்ளவும் தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.