/

வேட்புமனுவில் தகவல்கள் மறைப்பு: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கொளத்தூா் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவா் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது தொடா்பாக தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். - டிஎன்எஸ்

Updated On :30 ஜூலை 2026, 12:59 am IST

கொளத்தூா் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவா் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது தொடா்பாக தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் திருஞானசம்பந்தம் தாக்கல் செய்த வழக்கில், நடந்த முடிந்த பேரவைத் தோ்தலில் கொளத்தூா் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில் நான் போட்டியிட்டேன். இதே தொகுதியில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டாா்.

அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை நிா்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளை சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியில் ரூ.2.27 கோடிக்கு வாங்கிய சொத்து விவரங்களையும் மறைத்துள்ளாா். மறைக்கப்பட்ட தகவல்கள் குறித்து தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி-நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில், இந்த விவகாரம் தொடா்பாக, குற்றவியல் நடுவா் மன்றத்தில், தனிநபா் புகாா்தான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை சொத்துகள் என்பவை தனிப்பட்ட சொத்துகள் ஆகாது.

இந்த சொத்துகளில் முன்னாள் முதல்வருக்கு தொடா்பு இருப்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்டனா்.

இதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.