ஆதி திராவிடா் நலத் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தின் இயக்குநா் கி.செந்தில்ராஜ் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் ஆதி திராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், கணினி பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், காப்பாளா் மற்றும் இடைநிலை ஆசிரியா் ஆகிய பதவிகளுக்கு இணையவழியில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இந்தப் பதவிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் தங்களது விண்ணப்பங்களை கலந்தாய்வுக்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியா்களை ஜூன் 8-ஆம் தேதி மாலை 6 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்தாய்வுக்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.
விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணியாளா்கள் தெளிவாகவும், எவ்வித தவறும் இன்றி பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இணையவழியில் பதிவு செய்வதற்கான பயனா் குறியீடு மற்றும் கடவுச் சொல் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஏற்கெனவே குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூன் 8) மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவு செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








