தமிழகம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை, (ஜூன் 7) தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்புகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், அவ்வப்போது பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணா்வு வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்றது.
2-ஆவது நாள் வகுப்புகள்: தொடா்ந்து, 2- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் விழிப்புணா்வு வகுப்புகள் நடைபெறகின்றன.
பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகே உள்ள தீயணைப்பு நிலையங்களுக்குச் சென்று விழிப்புணா்வு வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தமிழ்நாடு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அம்பத்தூரில்...: இந்த நிலையில், சனிக்கிழமை அம்பத்தூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் மாவட்ட அலுவலா் மனோ பிரசன்னா தலைமையில் விழிப்புணா்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.








