தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியாா் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்ட்டது. இது குறித்து 2013-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் கட்டி முடித்தப் பின்னா், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியாா் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என 22.1.2024-இல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் நுழையக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயம்பேட்டில் சொந்த இடம் உள்ள ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அங்கிருந்து பேருந்துகளை இயக்கலாம். போரூா் சுங்கச்சாவடி, சூரப்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கலாம்.
அதேநேரம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில், தமிழ்நாடு மோட்டாா் வாகன சட்ட விதிகளின்படி, பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் விண்ணப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புதான் விண்ணப்பிக்க முடியும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஒப்புதல் கோரி, காட்டாங்குளத்தூா் பஞ்சாயத்து யூனியன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க உரிமம் வழங்கிய நிலையில், அதைத் தடுக்கும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது.
எனவே, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்கிறேன்.
கடந்த ஜனவரியில் அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் நடத்திய பேச்சில் போரூா், சூரப்பட்டு போல, பயணிகளை ஏற்றி இறக்க மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள இடத்தையும் பயன்படுத்துவது என இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த முடிவை ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.









