கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் காவல் ஆய்வாளர்கள் உள்பட 10 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான விஜய் கடந்தாண்டு செப். 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமி புரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி கரூரில் மத்திய குற்றப்புலாய்வுத்துறை (சிபிஐ) அதிகாரிகள் கரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் நெரிசலின் போது பலியானோரின் உறவினர்கள் மற்றும் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. ஜோஸ் தங்கையா மற்றும் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
நெரிசல் சம்பவத்தின் போது விஜய் பயன்படுத்திய வாகனம் கரூருக்கு கொண்டுவரப்பட்டு அதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே தேர்தல் வந்ததால் சிபிஐ அதிகாரிகளின் விசாரணையும் முடங்கி இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், வாங்கல் காவல் ஆய்வாளர் சையத் அலி மற்றும் கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் உள்பட 10 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஐ விசாரணை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
Summary
CBI officials questioned 10 people, including police inspectors, on Thursday regarding the fatal crowd crush incident in Karur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








