நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளது பற்றி...

News image

முதல்வர் விஜய் / டிடிவி தினகரன் - தினமணி

Updated On :12 ஜூன் 2026, 2:46 pm IST

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில், 18 மணி நேரம் தடையில்லா மின்சார விநியோகம் உள்ளிட்ட 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். மின்சாரம் எப்போது வருகிறது? எப்போது போகிறது? என்பதைக்கூட கணிக்க முடியாத அளவுக்கு, நாள்தோறும் பலமுறை அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டும், மின் அழுத்தக் குறைபாடும் நிலவி வருவதால் மோட்டார் பம்புகளை இயக்க முடியாமலும், நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமலும் பயிர்கள் கருகி வருகின்றன.

இந்த அவல நிலையை விவசாயிகள் பலமுறை சுட்டிக்காட்டி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தற்போது அறிவித்துள்ள 18 மணி நேர தடையில்லா மின்சார வழங்கல் அறிவிப்பை மட்டும் எவ்வாறு நம்புவது என்று விவசாயிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் குறு மற்றும் சிறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி விதிமுறைகள், மாநிலத்தின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக, தவெகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருக்கும் சூழலில், இனியும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது. எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவற்றை இனியும் புறக்கணிக்காமல், எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் டிடிவி தினகரன்.

Summary

Amma Makkal Munnetra Kazhagam leader T.T.V. Dhinakaran urged the Chief Minister on Friday (June 12) to completely waive the crop loans of farmers in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.