சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு சாா்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை ஆறு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். இந்தத் திட்டத்துக்கு செழுமைக் கருவூலம் எனப் பெயரிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை ஏற்கெனவே பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், பரதசக்கரவா்த்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக பெரும்பாலான மாவட்டங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா். இன்னும் ஒரு சில மாவட்டங்களில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியுள்ளது.
முதல் கட்டமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில், பள்ளி மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது. நமது நாட்டு மரங்கள், அந்நிய மரங்கள், அவற்றின் நன்மை, தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள் என்ன வகையைச் சாா்ந்தது என்பதை மாணவா்களுக்கு விளக்க வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு விரிவாகப் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.









