/

ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? - அன்புமணி கேள்வி

பற்றாக்குறை, நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? என அன்புமணி கேள்வி எழுப்பியிருப்பது குறித்து..

News image

ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 12:01 pm IST

பற்றாக்குறை, நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 4.50% கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் பச்சை பால் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. ஏழை மக்கள் பயன்படுத்தும் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது ஆகும்.

சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சைப் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்போது ஆவின் பச்சைப் பால் விற்பனை 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த சில நாள்களின் ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

ஆவின் பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டர் பச்சைப் பால் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7 வரை இழப்பு ஏற்படுவதாகவும் இதை சமாளிக்க முடியாமல் தான் பச்சைப்பால் வணிகத்தை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இழப்பைக் காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் வணிகத்தைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழ்நாட்டில் மிக அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் ஆவின் பச்சைப் பால் தான். இந்த வகை பாலை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.68 வரை விற்பனை செய்யும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.44க்கு விற்பனை செய்கிறது. இதனால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் தான் பச்சைப் பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் 2023-ஆம் ஆண்டு முதலே ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பாலின் விற்பனை விலை 900 மி.லி. ரூ. 50 ஆகும். கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். இதற்கு எதிராக பாமக குரல் கொடுத்ததால் ஆவின் நிறுவனம் அப்போது அந்த முயற்சியை கைவிட்டது. ஆனால், இப்போது பச்சைப்பால் விற்பனையை மீண்டும் நிறுத்தத் துடிக்கிறது.

ஆவின் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான குறைவான விலையில் விற்பதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது.

ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை ஆவின் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

Regarding Anbumani questioning whether Aavin is reducing the sale of green-variant milk citing shortages and losses...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.