திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கில் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றியை செல்லாதது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”திருச்சி கிழக்கில் வெற்றி பெற்ற விஜய் தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதால், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக கருதி, அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
மேலும், இந்த தேர்தல் வழக்கு முடியும் வரை அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட விஜய் 91,381 வாக்குகள் பெற்று, 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்றார்.
முன்னதாக, கோபி செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபுவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK candidate Inigo Irudayaraj files case against Chief Minister Vijay's victory!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






