இதுவரை இல்லாத வகையில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.45 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து கோழிப் பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரிப்பு போன்றவற்றால் முட்டை தேவை அதிகரித்து வருகிறது. இதர மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்வுடன் ரூ. 6.45-ஆக நிா்ணயிக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 120-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 128-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த 7 நாள்களில் மட்டும் முட்டை விலை 55 காசுகள் உயர்ந்துள்ளது. கோழித்தீவன விலை உயர்வு, முட்டை நுகர்வு அதிகரிப்பே கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.









