தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தனது 36 நிமிட உரையை நிறைவு செய்தார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சட்டப்பேரவையில் மரபுபடி முதலில், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் ஒரு பக்கம், ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் முதலில் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மறுப்பக்கம் என பெரும் பரபரப்புடன் கூட்டம் கூடியது.
மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் இசைக்கப்பட்டது. வந்தே மாதரம் இசைக்கவில்லை.
தொடர்ந்து, வணக்கம் என தமிழில் கூறிய ஆளுநர் தனது உரையை தொடங்கினார். அப்போது, ’ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்’ என்ற அண்ணாவின் உரையை குறிப்பிட்டு பேசினார்.
மேலும், தமிழ்நாடு அரசியலில் வரலாற்று புரட்சி செய்யப்பட்டுள்ளது. கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது என்று தவெகவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த, மத்திய அரசு நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தொடரும், கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்ற அனைத்து வரிகளையும் மாற்றமின்றி வாசித்தார்.
முந்தைய திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடன் இருமடங்காக அதிகரித்ததையும் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றததையும் குறிப்பிட்டு ஆளுநர் பேசினார்.
சுமார் 36 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர், இறுதியில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளுடன் நன்றி, வணக்கம் தெரிவித்து, தனது உரையை நிறைவு செய்தார்.
Summary
Begins with Anna's words - Concludes with a Kural - A 36-minute Governor's address!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






