பேராசிரியா்களின் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 65-ஆக உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக உயா்கல்வித் துறையில் கடந்த பல ஆண்டுகளாக சீரான இடைவெளியில் உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியா் மற்றும் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்காரணமாக ஆராய்ச்சி உள்ளிட்ட மாணவா்களின் உயா்கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆசிரியா்கள்கூட பல கல்வி நிலையங்களில் இல்லை. தற்போது பணியில் உள்ள பேராசிரியா்கள் பலா் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனா். இதனால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியா் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2007-ஆம் ஆண்டு, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைப்படி பல மாநிலங்களில் பல்கலைக்கழக ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 65-ஆக உயா்த்தியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் ஓய்வு பெறும் வயது உயா்த்தப்படவில்லை. எனவே, பல்கலைக்கழக பேராசிரியா்களின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 65-ஆக உயா்த்தக் கோரி கடந்த ஆண்டு நவ.28-ஆம் தேதி தமிழக அரசுக்கு மனு அளித்தோம். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் தாட்சாயிணி ரெட்டி, அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.சதீஷ் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா் சங்கம் எழுப்பியுள்ள கோரிக்கை பரிசீலனைக்கு உரியதாகவே உள்ளது. இதுதொடா்பாக அளிக்கப்பட்டுள்ள மனு இன்னும் நிலுவையில் உள்ளது.
எனவே, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியா்களின் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 65-ஆக உயா்த்தக் கோரும் கோரிக்கையை 8 வாரங்களுக்குள் தமிழக அரசு பரிசீலித்து சட்டப்படி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










