நான்குநேரி சம்பவம்: திமுக ஆட்சியில் ரத்த ஆறுதான் ஓடுகிறது! - இபிஎஸ்
நான்குநேரி சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு...


நான்குநேரி சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் திமுக ஆட்சியில் ரத்த ஆறுதான் ஓடுகிறது எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே சாலையில் நடந்து சென்றவர்களை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நான்குநேரி காவல் சரகம், பெரும்பத்து கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் பைக்குகளில் கும்பலாக வந்த 9 பேர், அரிவாளால் அங்கு நின்ற பொதுமக்களையும், தப்பி ஓட முயன்றவர்களையும் சரமாரியாக வெட்டினர்.
அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியை சோ்ந்த ஜான்(42) என்பவரும், வடமாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் புளியங்குளம் பகுதியிலும் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,
"திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்து பெட்ரோல் குண்டு நடத்திய கண்மூடித்தனமானக் கொடூரத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுதொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் காட்சிகள் காணவே பதைக்கின்றன. "சட்டம் ஒழுங்கு" என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த ஐந்தாண்டுகளை மந்தமாக கடந்துவிட்ட இந்த பொம்மை முதல்வரின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலைதான் இது. திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவதுபோல கலர் கலராக ரீல் விளம்பரங்களை மட்டும் செய்கிறது இந்த ஸ்டாலின் அரசு.
ஆனால், திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது! இப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் சமூகத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்துள்ளதாக அச்சத்துடன் போராடி வருகின்றனர். இந்த அச்சமும், பதற்றமும்தான் திமுக அரசின் சாதனையா? தொடர்ந்து இப்படி பதற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறதா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
சமூக சமநிலையை, பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன்? சமூக மோதல்களைத் தடுக்க, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக இந்த கொடிய குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...