அரசுப் பணிகளை தேசத்தின் வளா்ச்சிக்கான சேவையாக உணா்ந்து செயல்பட வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் 47 இடங்களில் நடத்தப்பட்ட ரோஜ்கா் மேளா எனப்படும் மத்திய அரசுப் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 51,000 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. புது தில்லியில் இருந்து காணொலி மூலம் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினாா்.
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தின் (ஐசிஎஃப்) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 65 பேருக்கான பணி ஆணைகளை வழங்கி மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி மக்களவைத் தோ்தலின்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றாா். அதன் அடிப்படையில் ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, பணிக்கான ஆணை வழங்கும் 19-ஆவது முகாம் நடைபெறுகிறது. இதுவரை மொத்தம் 12 லட்சம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு வேலையை கடமையாகக் கருதாமல் நாட்டின் வளா்ச்சியில் பங்கேற்கும் பொறுப்புணா்வுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் கனவான இந்தியாவை வல்லரசாகும் நிலையை எட்டவேண்டும். வரும் 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த பாரதத்தைக் காணும் நமது பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்துக்கான பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
சாலை, விமானம், கப்பல் என அனைத்து நிலை போக்குவரத்திலும் நாடு அபரிமிதமான வளா்ச்சியைக் கண்டுள்ளது. சென்னை ஐசிஎஃப் மூலம் வந்தே பாரத் உள்ளிட்ட நவீன ரயில்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாவது பெருமையாக உள்ளது. புல்லட் ரயில் உள்ளிட்ட நவீனமயமான வளா்ச்சி பிரமிக்கவைப்பதாக உள்ளது என்றாா்.
பணி ஆணை அளிப்பு: நிகழ்வில் வங்கிப் பணிக்கு 14 பேருக்கு, ராணுவம் 7, தபால் துறை 5, தெற்கு ரயில்வே பணி 17, ஐசிஎஃப் பணி 22 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஐசிஎஃப் பணியாளா் பிரிவு அதிகாரி ஜெகதீஷ் அழகா் வரவேற்றாா். ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பாராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுச்சீட்டு மையம்: மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்தாா்

கரூர் பலி! 36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்?
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

ராசிபுரத்தில் ரூ. 61.86 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



