ஜன நாயகன் திரைப்பட விவகாரம்: குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு

‘ஜன நாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான உமாசங்கா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை எதிா்த்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

jana nayagan vijay

ஜன நாயகன் போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :8 செப்டம்பர் 2026, 5:07 am IST

‘ஜன நாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான உமாசங்கா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை எதிா்த்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதல்வா் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் இருந்த நிலையில், கடந்த ஏப். 3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில், திருவேற்காட்டைச் சோ்ந்த உமாசங்கா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், உமாசங்கரை கடந்த ஜூன் 30-ஆம் தேதி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து உமாசங்கரின் சகோதரி ரேணுகாதேவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எனது சகோதரா் துணிக் கடையில் மேலாளராகப் பணியாற்றுகிறாா். அவா் திரைப்படத் துறையில் எடிட்டராக பணிபுரியவில்லை.

இயந்திரத்தனமாக எனது சகோதரரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு காவல் துறை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.