
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது தொடர்பாக...

விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி - கோப்புப்படம்
சென்னை: வார இறுதி நாள்கள் மற்றும் திங்கள் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தில்லி செல்வதற்கான விமானக் டிக்கெட் விலை ரூ. 8,943-ல் இருந்து ரூ. 31,047-ஆக உயர்ந்துள்ளது.
முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் திங்கள்கிழமை(செப். 14) கொண்டாடப்படவுள்ளது.
சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாள்கள் தொடர் விடுமுறையை அடுத்து, நாளை முதல் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் சொந்த ஊர்களில் விடுமுறையைக் கழிக்க வெள்ளிக்கிழமையே பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ரயில்களில் தென் மாவட்டங்களுக்கான முன்பதிவு பயணச்சீட்டுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
பண்டிகைக்காலப் பயண நெரிசல் காரணமாக, உள்நாட்டு விமானக் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன; சென்னையிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் வழக்கமான கட்டணத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளன.
இந்தக் கட்டண உயர்வால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான விமானக் கட்டணம் ரூ.5,392 லிருந்து ரூ. 19,761-ஆக உயர்ந்துள்ளது; அதேவேளையில் பெங்களூருக்கான கட்டணம் ரூ. 3,801-லிருந்து ரூ. 17,993-ஆகவும், சென்னை-தில்லி கட்டணம் ரூ. 8,943-லிருந்து ரூ. 31,047-ஆக உயர்ந்தது.
இதேபோன்று, தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ. 6,991-லிருந்து ரூ. 17,153-ஆகவும், திருச்சிக்கு ரூ. 4,646-லிருந்து ரூ. 14,673-ஆகவும், கோவைக்கு ரூ. 4,966-லிருந்து ரூ. 16,496-ஆகவும், ஹைதராபாத்திற்கு ரூ. 4,467-லிருந்து ரூ. 18,207-ஆகவும், மும்பைக்கு ரூ. 6,516-லிருந்து ரூ. 24,592-ஆகவும், கொல்கத்தாவிற்கு ரூ. 6,250-லிருந்து ரூ. 20,716-ஆகவும் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
விமானக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்திருந்த போதிலும், தொடர் விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளவும், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடவும் பயணிகள் தொடர்ந்து விமானப் பயணங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில், கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையிலிருந்து மதுரைக்கான ஆம்னி பேருந்து கட்டணம் ரூ. 4,000-ஆக அதிகரித்துள்ளது.
இதனால், விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
Summary
Vinayagar Chaturthi, one of the major Hindu festivals, will be celebrated across the country on Monday, September 14.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





