
தமிழக முதல்வரைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழக முதல்வரைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில், திமுக தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பற்றி தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் மிசா சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இந்த கருத்து மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி திமுக சார்பில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து சேலம் கோட்டை வளாகத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.பி. செல்வகணபதி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி. சிவலிங்கம் எஸ்.ஆர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரை அவதூறாக பேசிய தமிழக முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும். விஜய்யின் பேச்சு சட்டப்பேரவையில் விதிமுறைகளுக்கு மாறாக இருந்தது, இதனை அவர் திருத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து திமுக மீது குற்றம் சுமத்துவதும் தேவையில்லாத கருத்துகளை பதிவு செய்வதையும் அவர் நிறுத்த வேண்டும். திமுக தலைவர் குறித்து சட்டப்பேரவையில் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





