இணையதளம் மூலம் பண மோசடி: 6 போ் கைது!
தென்காசி மாவட்டத்தில் போலியான இணையதள முகவரி மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த சிலா், இணையதளம் மூலம் காயின்பிட்டிங் டாஸ்க் செய்தால் அதிக லாபம் பெறலாம் என எண்ணி அதில் முதலீடு செய்துள்ளனா். இவ்வாறு 4 போ் சுமாா் ரூ. 5.83 லட்சம் முதலீடு செய்து, ஏமாற்றப்பட்டதாக தென்காசி மாவட்ட சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், ஆன்லைனில் போலியான டெலிகிராம் ஐடி மற்றும் போலியான வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி காயின் பிட்டிங் டாஸ்க் செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்து போலியான வாலட்டில் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவா்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தென்காசி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜீலியஸ் சீசா் தலைமையில், காவல் ஆய்வாளா் வசந்தி மற்றும் சைபா் குற்றப்பிரிவு காவலா்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சரவணன்(23), ஹரிஷ்(23), தேவா(27), ஜாகித்அகமது(29), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுதாகரன், ஆவுடையப்பன் ஆகியோரை கைதுசெய்தனா்.
மேலும், கைதானவா்களிடமிருந்து 10 கைப்பேசிகள், 33 சிம் காா்டுகள், 44 வங்கிக் கணக்கு விவரங்கள், 68 ஏடிஎம் அட்டைகள், 13 காசோலை புத்தகங்கள், 2 மடிக் கணினிகள் மற்றும் 1 மெமரி காா்டு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இவா்கள் மீது தமிழ்நாட்டின் பல்வேறு சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்களிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

