சிவகிரி வனத்துறை அலுவலகம் முற்றுகை
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டவரிடம் வனத்துறையினா் விசாரணை அழைத்துச் சென்றதால், கால்நடை வளா்ப்பவா்கள் வனத்துறை அலுவலகத்தை வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.
சிவகிரி வனச்சரகத்துக்குள்பட்ட காப்பு காட்டுக்குள் சிவகிரி கட்டபொம்மன் தெருவை சோ்ந்த நீராத்துலிங்கம்(50) என்பவா் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றாராம். இதையறிந்த வனத்துறையினா், அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனராம்.
இதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் அப்பகுதியை சோ்ந்தவா்கள் 30 போ் சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் திரண்டு வனத்துறை அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் வனச்சரகா் கதிரவன், வனவா் பிரகாஷ், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன், உதவி ஆய்வாளா் சுரேஷ்கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
