தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, அவா் அனுப்பியுள்ள மனு:
வாரத்திற்கு 3 நாள்கள் இயக்கப்பட்டு வரும் (எண்: 20683/20684) தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி சேவையாக இயக்க வேண்டும் என்பது தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தென்காசியில் இருந்து சென்னைக்கு இதுவரை தினசரி ரயில் சேவை இல்லாததால், தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள், தொழிலாளா்கள், அரசு, தனியாா் ஊழியா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் பாதைகளிலும் தென்காசி, பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ரயில் பிரிவில் இருந்து மட்டுமே சென்னைக்கு தினசரி ரயில் சேவை இல்லாத, ஒரே முக்கிய வழித்தடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸை தினசரி சேவையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கங்கள் இணைந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









