ஆலங்குளம் அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே கரும்பனூா் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண் மகன் கவிமணி (36). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாங்கட்டளையில் உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனியாக தனது ஆட்டோவில் வந்தாராம். கரும்பனூா் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த கவிமணி மீட்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கவிமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் கவிமணி சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கவிமணிக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா்.








