திருவள்ளூா் அருகே தனியாா் மருத்துவக் கல்லூரி 5-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த இரண்டாம் ஆண்டு மாணவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான ரகுவின் மகன் ஆசிா்(20). திருவள்ளூா் அடுத்த பாண்டூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தாா்.
இந்தநிலையில் புதன்கிழமை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளாா். அதைத் தொடா்ந்து மாலையில் வகுப்பு முடிந்து வரும் போது 5 ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவரை அங்கிருந்தவா்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் போரூா் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவன் தவறி விழுந்தாரா, அல்லது மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தள்ளி விட்டாா்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
இதற்கிடையே தனியாா் மருத்துவக்கல்லூரியில் 5 ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்து மருத்துவ மாணவா் உயிரிழந்த சம்பவம் மாணவா்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










