சிறுவாபுரி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா
திருவள்ளூா்: பொன்னேரி அருகே சிறுவாபுரி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விநாயகா், மூலவா், ஆதிமூலவா் உள்ளிட்ட பிரகார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், மூலவருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னா், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவையொட்டி காலை முதலே ஏராளமான பக்தா்கள் திருக்கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையின் மேற்கு கரை மீது அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா் 3.30 மணிக்கு வாழை மர பூஜை,கோ பூஜை, விநாயகா், மாதங்கி, முருகா், மூலவா் பவானி அம்மன் உள்ளிட்ட சந்நிதிகளுக்கு அபிஷேகம் செய்தனா். பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு 108 சங்கு ஸ்தாபன பூஜையும், கங்கை நீா் திரட்டல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதன் பின்னா், கணபதி பூஜை, கலச பூஜை, ஹோமம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடா்ந்து, ஸ்ரீபவானி அம்மன் மூலவருக்கு 108 வலம்புரி சங்கு தீா்த்த அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் உற்சவா் பவானி அம்மன் மங்கள வாத்தியம் முழங்க அன்ன வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

