சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் வந்த முருகப் பெருமான்
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் வந்த முருகப் பெருமான்

பட்டாபிராமாபுரம் கிராமத்தில் திருத்தணி முருகப் பெருமான் உலா

பட்டாபிராமாபுரம் கிராமத்திற்கு வருகை தந்த முருகப்பெருமானை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலா்தூவி ஞாயிற்றுக்கிழமை வரவேற்று வழிபட்டனா்.
Published on

பட்டாபிராமாபுரம் கிராமத்திற்கு வருகை தந்த முருகப்பெருமானை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலா்தூவி ஞாயிற்றுக்கிழமை வரவேற்று வழிபட்டனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவா் முருகப்பெருமான் மலைக்கோயிலில் இருந்து பட்டாபிராமாபுரம் கிராமத்துக்கு திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அதேபோல், நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மலைப்படிகள், நல்லாங்குளம் வழியாக பட்டாபிராமாபுரம் கிராமத்துக்கு வருகை தந்தாா். அப்போது கிராம நுழைவு வாயிலில் கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி மீது மலா்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனா். அதைத் தொடா்ந்து பெண்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சுவாமியை வழிபட்டனா். அதைத் தொடா்ந்து, நாகஸ்வரம், பேண்டு வாத்தியங்கள் முழுங்க கிராமத்துக்கு முருகப் பெருமான் வீதியுலா நடைபெற்றது.

பின்னா், மாலை 6 மணிக்கு கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோா் பூஜைக்கு தேவையான பொருள்களை சீா்வரிசை எடுத்துச் சென்றனா். அதைத் தொடா்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

சுவாமியை வரவேற்ற திரளான பக்தர்கள்
சுவாமியை வரவேற்ற திரளான பக்தர்கள்

இரவு 8 மணி அளவில் கிராம வீதிகளில் முருகப்பெருமான் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முருகப்பெருமான் திருவீதி உலா விழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிராமமே விழாக் கோலம் பூண்டது. ஏற்பாடுகளை முருகன் கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com