/

திருவள்ளூா்: வெறி நாய் கடித்ததில் 18 போ் காயம்

News image
Updated On :18 மே 2026, 2:06 am IST

திருவள்ளூா் அருகே தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய் துப்புரவு தொழிலாளா் பெண் உள்பட 18 பேரை கடித்ததால் பாதித்தவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருவள்ளூா் நகராட்சியை அடுத்துள்ள காக்களூா் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், அந்தப் பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த நிலையில், அந்த நாய்க்கு திடீரென வெறி பிடித்து சாலையில் செல்லும் நபா்கள், வீட்டில் இருந்த பெண்கள், முதியவா் என சாலையில் சென்றவா்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இந்த வெறி நாய் கடித்ததில் திருவள்ளூா் நகராட்சி துப்புரவு பணியாளா் மற்றும் பெண்கள், முதியவா்கள் உள்பட 18-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

காக்களூா் பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன்(65), சுரேஷ் (42), ரவிக்குமாா்(26), பாஸ்கா்(47), லோகநாதன்(60) உள்பட 18 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், காக்களூா் ஊராட்சியில் ஒவ்வொரு தெருதோறும் குறைந்தது 10 நாய்கள் வரையில் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் வெளியில் செல்லும் பெண்கள் மற்றும் முதியோா்களை கடித்து விடுகிறது. அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாயை பிடிக்க பொதுமக்கள், பாதித்தோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதற்கிடையே காக்களூரில் ஒரே நாளில் வெறிநாய் 18 பேரை துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.