/

திருவள்ளூா்: 1,000 ஏக்கா் பரப்பளவில் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 1,000 ஏக்கரில் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குமரவேல் தெரிவித்தாா்.

News image

திருவள்ளூரை அடுத்த பிரையாங்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப் பாசனம். - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:51 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 1,000 ஏக்கரில் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குமரவேல் தெரிவித்தாா்.

இந்த மாவட்டத்தில் தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகள், பழக்கன்றுகள், நிழல் வலை குடில் அமைத்தல், களைகளை தவிா்த்து கொடியில் காய்கறி விளைச்சலை அதிகரிக்கும் வகையில் நிலப்பரப்பில் நெகிழி தாள் பரப்புதல் மற்றும் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான மானியத் திட்டங்கள் தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், துளிநீரில் அதிக உற்பத்தி செய்யும் பொருட்டு சொட்டு நீா்ப்பாசனம் அமைத்து அதிக விளைச்சல், தரமான காயகறிகள், பழங்கள், கீரைகள், மலா்களை உற்பத்தி செய்து, அதிக வருவாய் பெற முடியும். அதனால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் சொட்டு நீா்ப்பாசன திட்டத்தில் பயன்பெறலாம்.

இந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 1,000 ஏக்கா் பரப்பளவில் சொட்டுநீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளும் மற்றும் பதிவு செய்து 7 ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

மேலும், திட்டம் சாா்ந்த தகவல்கள் பெற அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.