உலக அளவில் பல்வேறு நாடுகளில் பிரபலமான செடான் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று ஹோண்டா சிட்டி. அவ்வப்போது ஹோண்டா சிட்டியில் பல்வேறு புதுமைகளை புகுத்தி அடுத்தடுத்த தலைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது ஹோண்டா நிறுவனம். அந்த வரிசையில் ஹோண்டா சிட்டி செடான் 5வது தலைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் 2020ம் ஆண்டின் நடுவே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டாவைப் பொறுத்தவரை, ஹோண்டா சிட்டி நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அந்நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில்தான், தற்போது 5 வது தலைமுறை மாடலுடன், ஹோண்டா சிட்டி தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கூர்மையான வடிவமைப்பு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. ஸ்போர்ட்டியர் வேரியண்ட்டை கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள 4வது தலைமுறை மாடலை விட இது நீளமானது எனக் கூறப்படுகிறது. எனவே, முந்தைய மாடலை விட இதில் அதிகம் பேர் பயணிக்க முடியும்.
இதன் சிறப்பம்சமாக முன்பக்கத்திலும், பின்புறத்திலும் உள்ள விளக்குகள் பிரமிக்க வைக்கின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் கார் விற்பனையில் புதிய வரலாற்றை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி 1.0 லிட்டர் டர்போ எஞ்சின் கொண்டது. இது 122 பி.எஸ் சக்தியையும் 173 என்.எம் திருகுவிசையையும் கொண்டது.
மேலும், சிறந்த செயல்திறன், சிறந்த சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இரட்டை ஏர்பேக்குகள், வாகன ஸ்திரத்தன்மை உதவி, ஈபிடியுடன் ஏபிஎஸ்( ABS with EBD), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (hill start assist) மற்றும் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
புதிய ஹோண்டா சிட்டி விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.