/

வாகனக் கடன் சேவை: ஹூண்டாய் நிறுவனத்துடன் கைகோக்கிறது ஆக்ஸிஸ் வங்கி

வாகனம் வாங்குவோருக்கு கடன் சேவை அளிப்பதற்காக, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்துடன் ஆக்ஸிஸ் வங்கி கைகோத்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:31 am

DIN


மும்பை: வாகனம் வாங்குவோருக்கு கடன் சேவை அளிப்பதற்காக, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்துடன் ஆக்ஸிஸ் வங்கி கைகோத்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வாகனக் கடன் வழங்குவதில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்துக்கும், ஆக்ஸிஸ் வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள், புதிதாக வாகனம் வாங்க வேண்டுமெனில் நேரடியாக இணைய சேவை மூலம் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இதனால், நகா்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி அனைத்துப் பகுதி வாடிக்கையாளா்களும் இணையதளம் மூலம் கடனுதவி பெறலாம்.

தற்காலத்தில், வாடிக்கையாளா்கள் தங்கள் வாகனங்களைத் தோ்வு செய்வதிலிருந்து வங்கியில் கடனுதவி பெறுவது வரை அனைத்து நடைமுறைகளும் இணையதளம் மூலமாக முடிவடைந்து விடுகிறது. அதற்கேற்ப வங்கிச் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவு செயல் இயக்குநா் டபிள்யூ.எஸ். ஓஹ் கூறுகையில், ‘ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளா்கள் நேரடியாக வாகனக் கடன் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்துடன் ஆக்ஸிஸ் வங்கி மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் வாடிக்கையாளா்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.