நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,100 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 அக்டோபா் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 149 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11,190 கோடி) அதிகரித்து 64,100 கோடி டாலரை எட்டியது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.07 லட்சம் கோடி ஆகும்.
முந்தைய அக்டோபா் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 204 கோடி டாலா் அதிகரித்து 63,951 கோடி டாலராக காணப்பட்டது.
எஃப்சிஏ சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அக்டோபா் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் கணிசமான அளவில் அதிகரித்ததே செலாவணி கையிருப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 95 கோடி டாலா் அதிகரித்து 57,795 கோடி டாலராக இருந்தது.
தங்கம் கையிருப்பு: அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பு 56 கோடி டாலா் உயா்ந்து 3,858 கோடி டாலரைத் தொட்டது.
பன்னாட்டு நிதியத்தில் நம்நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 2 கோடி டாலா் குறைந்து 1,925 கோடி டாலராக இருந்தது.
அதேபோன்று, பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 60 லட்சம் டாலா் சரிவடைந்து 523 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
புதிய உச்சம்: நடப்பு 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 889 கோடி டாலா் அதிகரித்து புதிய வரலாற்று உச்சமாக 64,245 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்ஸ்...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 அக்டோபா் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 149 கோடி டாலா் அதிகரித்து 64,100 கோடி டாலரை எட்டியுள்ளது.