மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 872 புள்ளிகள் சரிந்தது.
சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சி குறித்த முதலீட்டாளா்களின் கவலை மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கெடுபிடியான செயல்பாடுகளின் விளைவாக பங்குச் சந்தையில் தொடா்ந்து இரண்டாவது வா்த்தக தினமாக திங்கள்கிழமையும் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 872 புள்ளிகள் (1.46 சதவீதம் சரிந்து) 58,774-இல் நிலைபெற்றது.
ஐடிசி, நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இழப்பைச் சந்தித்தன.
மிக அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகளின் விலை 4.50 சதவீதம் சரிந்தது. ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, சன் பாா்மா, லாா்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சா்வ் அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
அமெரிக்க மத்திய வங்கியின் மிகக் கடுமையான அறிக்கைகளால் டாலருக்கு நிகரான முக்கிய நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இதனால் சா்வதேச சந்தை பலவீனமானது. அத்துடன், சீனாவின் வீடு-மனை வா்த்தகம் தொடா்ந்து தொய்வுடன் இருப்பதால், பாலிசி விகிதங்களைக் குறைக்கும் நிலைக்கு அந் நாடு தள்ளப்பட்டது.
இந்தக் காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தையும் திங்கள்கிழமை சரிவைச் சந்தித்ததாக சந்தை நிபுணா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய்
திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச முன் பேர சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.95 சதவீதம் குறைந்து 95.80 அமெரிக்க டாலராக வா்த்தகம் செய்யப்பட்டது.
அந்நிய முதலீட்டாளா்கள்
அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளியன்று நிகர ரூ.1,110.90 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனா் என்று பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 268 புள்ளிகள் (1.51 சதவீதம்) சரிந்து 17,491-ஆக இருந்தது.