

சா்வதேச எரிபொருள் விலைகள் உயா்வு காரணமாக மத்திய அரசு சந்தை ஆதாய வரி விதித்ததால், இந்தியாவின் முதன்மை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி-யின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 30 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 12,825.99 கோடி கோடியாக இருந்தது. இதன் மூலம், பங்கு ஒன்றுக்கு ரூ.10.20 நிகர லாபம் கிடைத்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ரூ. 18,347.73 கோடியாகவும் பங்கு ஒன்றுக்கான நிகர லாபம் ரூ.14.58-ஆகவும் இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 சதவீதம் சரிந்துள்ளது.
முந்தைய ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15,205.85 கோடியாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில், செப்டம்பா் காலாண்டில் நிகர லாபம் 15.6 சதவீதம் குறைந்துள்ளது.
ஓா் ஆண்டுக்கு முன்னா் நிறுவனத்தின் எண்ணெய் வருவாய் பீப்பாய்க்கு 69.36 டாலரில் இருந்தது. இது, இந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 37.7 சதவீதம் உயா்ந்து பீப்பாய்க்கு 95.49 டாலராகியுள்ளது. இந்த நிலையிலும், நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.